அரக்கோணம் கொலையில் தம்பி உள்பட 5 பேர் கைது

அரக்கோணத்தில் நடந்த தனியார் மருத்துவமனை ஊழியர் கொலையில் தம்பி உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்

Update: 2021-06-27 11:10 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காமராஜர் தெருவைச் சேர்ந்த கோதண்டன். தனியார் மருத்துவமனை ஊழியரான இவரைக் கடந்த இருதினங்களுக்கு முன்பு அருகிலுள்ள வடமாம்பாக்கம் சுடுகாட்டில் கும்பல் ஒன்று கத்தியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.

கொலை நடந்த போது பதுங்கியிருந்து பார்த்த கோதண்டனின் உறவினர் சிவராஜ் அவரது பெற்றோரிடம் கோதண்டன் கொலை செய்யப்பட்டு இறந்த சம்பவத்தை தெரிவித்ததன் மூலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

அதன் பேரில் அங்கு வந்த அரக்கோணம் டவுன் போலீஸார் விசாரித்து வந்தனர். அப்போது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இராணிப்பேட்டை எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு பின்பு குற்றவாளிகளை விரைந்து பிடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

இதனையடுத்த அரக்கோணம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்தின்பேரில் இருவரை பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று கொலை குறித்து விசாரித்தனர். விசாரணையில்  கோதண்டனின் சித்தப்பாவின் மகனான மனோஜ், அவனது நண்பர்களுடன் சேர்ந்து கோதண்டனை கத்தியால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து போலீஸார் மனோஜ்குமார் மற்றும் அவனது கூட்டாளிகளைத் தேடிவந்தனர்.  இந்நிலையில் மனோஜ்குமார், சுனில், மணிகண்டன், முகேஷ்குமார், சுப்பிரமணி ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்

Tags:    

Similar News