அரக்கோணத்தில் போலீஸைக் கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்
அரக்கோணத்தில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுத்த போலீஸைக் கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
அரக்கோணம் தாலூக்கா அலுவலகத்தில், ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ராணிப்பேட்டை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அரக்கோணம் அடுத்த மூதூர் கிராம அருந்ததி இன மக்கள் தங்களுக்கு அரசு வழங்கிய நான்கு ஏக்கர் நிலத்தில் 75 குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர். அதில் , ஒன்றரை ஏக்கர் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து பைப் லைன் மூலம் நிலத்திற்கு தண்ணீர் எடுத்து செல்வதாகவும், அதனைத் தடுத்து, நிலத்தை மீட்க கோரி 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.
ஆனால் அங்கிருந்த, போலீஸார், அவர்களை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினர். இதனால், மூதூர் கிராம மக்கள், தங்களின் அடிப்படை உரிமைகளுக்கு அனுமதி மறுத்ததாக போலீசாரை கண்டித்து தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை சாலையில் வீசி, தாலுககா அலுவலக முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையறிந்த மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அவர்களை அழைத்து மனுக்களை பெற்று கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து அமைதியடைந்த அவர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.