கீரை மற்றும் காய்கறிகள் விற்பனைக்கான சிறப்பு மையம் துவக்கம்

இராமநாதபுரம் தோட்டக்கலை பூங்காவில் விளையும் கீரை, காய்கறிகள் விற்பனைக்கான சிறப்பு மையத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Update: 2021-08-10 07:45 GMT

இராமநாதபுரம் தோட்டக்கலை பூங்காவில் விளையும் கீரை மற்றும் காய்கறிகள் விற்பனைக்கான சிறப்பு மையத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒன்று வீதம் 11 ஒருங்கிணைந்த தோட்டக்கலை பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பூங்காக்களில் தக்காளி, வெண்டெய்க்காய், மிளகாய், வெங்காயம், பாகற்காய், புடலங்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளும், தண்டங்கீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை, மிளகு தக்காளி கீரை, முருங்கைக்கீரை, வல்லாரை, பிரண்டைக் கீரை உள்ளிட்ட பல்வேறு கீரை வகைகளும் முழுக்க முழுக்க இயற்கை உரங்கறைக் கொண்டு வளர்க்கப்படுகின்றன.

இவ்வாறு வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அந்தந்த தோட்டக்கலை பூங்காக்களுக்கு அருகிலேயே பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வாலாந்தரவையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை பூங்காவில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரைகள் விற்பனைக்கான சிறப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா துவக்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது, கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News