முதுகுளத்தூர் அருகே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்: மாணவர்கள் அவதி

முதுகுளத்தூர் அருகே தரைப்பாலத்தில் மூழ்கி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு.

Update: 2021-12-01 13:32 GMT

செய்யாமங்கலம் கிராமத்திற்கு முன்பாக அமைந்துள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் மாணவர்கள் பள்ளி செல்ல கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

முதுகுளத்தூர் அருகே தரைப்பாலத்தில் மூழ்கி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். 5 கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி.

வைகை அணையில் இருந்து கடந்த 27ஆம் தேதி முதல் 12 ஆயிரம் கனஅடி வீதம் பார்திபனூர் மதகிற்கு தண்ணீர் வந்தடைந்தது. இதையடுத்து பார்த்திபனூரில் இருந்து 5,600 கன அடி தண்ணீர் இராமநாதபுரம் பெரியகண்மாய் மற்றும் கமுதியில் உள்ள பரளையாறு, குண்டாற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் முதுகுளத்தூர் அருகே செய்யாமங்கலம் கிராமத்திற்கு முன்பாக அமைந்துள்ள தரைப்பாலத்திற்கு மேல் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் செய்யாமங்கலம், தாதனேந்தல், பிரண்டைகுளம், புதுப்பட்டி, முனியனேந்தல் உள்ளிட்ட 5 கிராமத்தினர் இந்த தரைப்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆகையால் தரைப்பாலத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து 6 அடி உயரத்திற்கு மேல் செல்வதால் அன்றாட வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் 5 கிராமத்திலுள்ள மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்ல முடியாமல் கிராமத்திலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேம்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News