முதுகுளத்தூர் அருகே மரத்தில் கார் மோதி விபத்து: சிறுமி பலி; 3 பேர் படுகாயம்

கோவில் திருவிழாவுக்கு பெற்றோருடன் வந்தபோது மரத்தில் கார் மோதி சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-07 08:15 GMT

விபத்துக்குள்ளான கார்.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பூக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் ராமநாதன் (வயது 42). இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் கோவில் திருவிழாவிற்காக சொந்த ஊரான பூக்குளம் கிராமத்திற்கு காரில் புறப்பட்டனர்.

அப்போது அவரது தாயார் காளியம்மாள், மனைவி கங்காதேவி(32), மகள் பிரகதி(10) ஆகியோரும் வந்தனர். ராமநாதன் காரை ஓட்டி வந்தார். நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் முதுகுளத்தூர் அருகே உள்ள உடைகுளம் கிராமம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் உள்ள புளிய மரத்தில் மோதியது.

இதில் ராமநாதன், காளியம்மாள், கங்காதேவி, பிரகதி ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர். இந்த தகவலை அறிந்த கீழத்தூவல் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 4 பேரையும் சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் கொண்டு செல்லும் வழியில் பிரகதி உயிரிழந்தார். பிரகதியை பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராமநாதன், காளியம்மாள், கங்காதேவி ஆகிய 3 பேரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News