அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம்

அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டினார்

Update: 2023-09-03 13:15 GMT

அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் எனமுதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமாக உள்ளது. இதற்காகவே ஒரே நாடு ஒரே தேர்தல் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தெரிவித்தார். திமுக செயற்குழு உறுப்பினர் ந. மனோகரன் இல்லத் திருமண விழா சென்னை புது வண்ணாரப் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் எனக் கோரி தேர்தலில் போட்டியிட்டோம். தற்போது இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் மகத்தான வெற்றியை தர வேண்டும்.

தற்போதைய தேர்தல் யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதற்காகவே நடைபெற உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் பெரும் வெற்றியை சந்திக்கும். இக்கூட்டமையை பார்த்து பாஜக பயப்படுதால்தான் தற்போது தேவையே இல்லாமல் திடீரென பாராளுமன்ற கூட்டத்தை நடத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை வலியுறுத்தி இதுவரை இல்லாத வகையில் நாட்டின் பொது நபராக கருதப்படும் முன்னாள் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தை ஆலோசனை குழுவின் தலைவராக பாஜக அரசு நியமித்துள்ளது. இது வரம்பு மீறியது மட்டுமல்லாமல் மரபையும் மீறிய செயல். பாராளுமன்ற ஜனநாயகத்தை சிதைக்கும் வகையில் ஆலோசனை குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியான திமுகவை சேர்ந்த ஒருவரும் இக்குழுவில் நியமிக்கப்படாதது ஏன்?

மோடி தான் நினைத்ததை எல்லாம் சாதிக்க சர்வாதிகாரத்தை பயன்படுத்தி பயமுறுத்துகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இன்னும் இரண்டரை ஆண்டுகள் மீதமுள்ள தமிழ்நாடு கேரளா மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் நடைபெற்று வரும் ஆட்சிகளை கலைத்து விடப் போகிறார்களா?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி விட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசியல் கட்சிகளும் வாக்காளர்களும் காத்திருக்க வேண்டுமா? இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் படிப்படியாக இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக வும் முயற்சிக்கின்றன. இதுவே அவர்கள் விருப்பமாகவும் உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேர்தல் செலவினம் கூடுதலாக ஏற்படுகிறது என்ற கூற்று வேடிக்கையாக உள்ளது என்றார் ஸ்டாலின்.

இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி ஆர் பாலு, அமைச்சர்கள் க.பொன்முடி, பி. கே சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி எம்எல்ஏக்கள் கே.பி. சங்கர், ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, ஜே.ஜே. எபினேசர், மாவட்டச் செயலாளர் த.இளைய அருணா, மண்டலக்குழு தலைவர்கள் தி.மு. தனியரசு, நேதாஜி கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News