நீலகிரியில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

இரு வாரங்களில், 8 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-29 11:51 GMT

நீலகிரியில், 'கொரோனா' காலகட்டத்தையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் வேலைக்கு செல்கின்றனர். இதை சாதகமாக்கி கொண்ட சிலர், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதற்கு பெற்றோரும் உறுதுணையாக இருந்துள்ளனர். இந்நிலையில், மாவட்டத்தில் சில இடங்களில், குழந்தை திருமணம் நடப்பதாக மாவட்ட சமூக நலத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி உத்தரவின் பேரில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இரு வாரங்களில், 8 குழந்தை திருமணம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி கூறுகையில்,

இரு வாரங்களில், 8 குழந்தை திருமணங்கள் கண்டறியப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டது. குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட பெற்றோர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இனி, குழந்தை திருமணம் விதி மீறலில் ஈடுபட்டால், 2 ஆண்டு சிறை தண்டனை, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags:    

Similar News