உதகை மண் ஆராய்ச்சி நிலையத்தில் வனபாதுகாவலர்களுக்கு பயிற்சி முகாம்
வனப்பகுதிகளில் நீர்பிரி முகடுப்பகுதி மேலாண்மை குறித்து உதவி வனபாதுகாவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது;
உதகையில் நடைபெற்ற உதவி வனபாதுகாவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா
உதகை தீட்டுக்கல் பகுதியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சார்பில், வனப்பகுதிகளில் நீர்பிரி முகடுப்பகுதி மேலாண்மை குறித்து உதவி வனபாதுகாவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் கடந்த 6-ந் தேதி தொடங்கியது.
12 நாட்கள் பயிற்சி முடிந்து நிறைவு நிகழ்ச்சி மையத்தில் நடந்தது. மத்திய உயர்வன பயிற்சியக முதல்வர் திருநாவுக்கரசு பயிற்சி முடித்த 45 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
வனப்பகுதிகளில் விஞ்ஞான பூர்வமான நீர்வள கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். நீர்பிரி முகடு பகுதிகளில் ஒருங்கிணைந்த திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும் என்றார்.
முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் பேசும்போது, நஞ்சநாடு கிராமத்தில் உள்ள நீர்பிரி முகடு பகுதியில் கள பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் உதவி வன பாதுகாவலர்கள் மாதிரி நீர்பிடி முகடு பகுதி அமைப்பது குறித்து திட்ட அறிக்கை தயார் செய்தனர் என்றார். இதில் ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணன் கலந்துகொண்டார்.