உதகை பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி - பொதுமக்கள் நிம்மதி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த, உதகை அரசு தாவரவியல் பூங்கா, வரும் திங்கட்கிழமை முதல் நடைபயிற்சிக்கு திறக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Update: 2021-06-26 13:28 GMT

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும், அனைத்து  சுற்றுலா தலங்கள், கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில், தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நேற்று அறிவித்தது. இதில்,  நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதலாக சில தளர்வுகளை அரசு அறிவித்தது.

அதன்படி, பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, உதகையில் உள்ள  அரசு தாவரவியல் பூங்கா, வரும்  திங்கட்கிழமை முதல்,  காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை நடை பயிற்சிக்காக, திறக்கப்படவுள்ளது. 

பூங்காவினுள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக, 200 ரூபாய் செலுத்தி அனுமதி அட்டை பெற்றுக் கொள்ளலாம்,  என தோட்டக்கலை துறை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளொன்றுக்கு 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் நடைபயிற்சி மேற்கொள்வோரின் உடல் வெப்பநிலை கண்டறிந்து பூங்காவினுள் அனுமதிக்கப்படுவர். நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து,  முகக்கவசம் அணிந்து, உரிய  வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று, அவர் தெரிவித்தார். அரசின் அறிவிப்பால், உடற்பயிற்சி மேற்கொள்வோர் நிம்மதி அடைந்துள்ளனர். 

Tags:    

Similar News