உதகை ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கொரோனா, உள்ளாட்சி தேர்தல்காரணமாக நடைபெறாமலிருந்த வாராந்திரக் கூட்டம் மீண்டும் நடைபெறுகிறது.;
நீலகிரி மாவட்டத்தில், கொரொனா தொற்று பரவல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததது.
தற்போது, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், 14.03.2022 முதல், பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் நடைபெற உள்ளது. அதுசமயம், பொதுமக்கள் சமூக இடைவெளியினைக் கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் மக்கள்குறை தீர்க்கும்நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் விண்ணப்பதாரர்களது மனுக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். மேற்படி, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். அதுசமயம், விண்ணப்பதாரர்களது மனுக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய மனுதாரர்களது ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை எண்கள் கட்டாயமாகும். எனவே, விண்ணப்பதாரர்கள் தவறாது தங்களது ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையுடன் வந்து பயன்பெற இதன் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொள்கிறார்.