உதகையில் தாறுமாறாக ஓடிய லாரி - அடுத்தடுத்து 3 கார்கள் சேதம்

உதகையில், அதிவேகமாக சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து, 3 கார்கள் மீது மோதியது.

Update: 2021-09-20 12:29 GMT

தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய லாரி. 

உதகை, சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து எட்டின்ஸ் சாலை வழியாக ஏ.டி.சி. பகுதியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. லாரி டிரைவருடன், கிளீனர் ஒருவர் இருந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

எனினும், லாரியை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டியதால்,  மேலும் 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி மற்றும் 3 கார்களின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. உடனே வாகன ஓட்டிகள் லாரி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தால்,  3 கார்களும் சாலை நடுவே நின்றன. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேரிங்கிராசில் இருந்து மத்திய பஸ் நிலையத்துக்கு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News