மகளிர் உரிமை தொகை வழங்குவது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மகளிர் உரிமை தொகை வழங்குவது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Update: 2023-07-11 16:37 GMT

மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பங்களை பெற மூன்று கட்டங்களாக முகாம் நடத்தப்படவேண்டும். முகாம் நடத்துவதற்கான பள்ளிக்கட்டடம், சமுதாயக்கூடம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தேர்வு செய்து உடன் சமர்பிக்க வேண்டும். முதற்கட்டத்தில் சுமார் 1,10,000 குடும்ப அட்டைகளுக்கு 200 முகாம்களிலும், இரண்டாம் கட்டத்தில் சுமார் 1,10,000 குடும்ப அட்டைகளுக்கு 200 முகாம்களிலும் விண்ணப்பங்கள் பெறும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். திட்ட இயக்குநர் இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்டோ மூலம் விளம்பரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அச்சடித்து வரப்பெறும் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் டோக்கன்களை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அனைத்து நியாய விலைக்கடை விற்பனையாளர்களிடம் அளித்து அதனை அவர்கள் வீடுகள் தோறும் சென்று வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் விண்ணப்பங்களில் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் குடும்ப அட்டை எண் குறிப்பிட்டு வழங்கி, முகாம் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

மேலும், 404 ரேஷன் கடைகள் மற்றும் 34 நடமாடும் ரேஷன் கடைகள் ஆகியவற்றின் விற்பனையாளர் விவரங்களை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அளிக்க வேண்டும். முகாம் நடைபெறும் இடங்களில் வரும் பயனாளர்கள் அமர்வதற்கான போதிய இருக்கைகள், குடிநீர், கழிப்பறை வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். முகாமின் போது பூர்த்தி செய்யப்படாத விண்ணப் பங்கள் பெறப்பட்டால் அதனை பூர்த்தி செய்து வழங்க உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரிய தர்ஷினி, கலெக்டரின் நேரடி உதவியாளர் தனப்ரியா, திட்ட இயக்குநர்கள் உமாமகேஸ்வரி (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), பாலகணேஷ் (மகளிர் திட்டம்), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், கூடலூர்வருவாய் கோட்டாட்சியர் முகம்மது குதுர துல்லா, நகராட்சி ஆணையாளர்கள் ஏகராஜ் (ஊட்டி), கூடலூர், நெல்லியாளம் (பொ) பிரான்சிஸ் சேவியர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிக்குமார் சக்கர பாணி, வட்டாட்சியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News