உதகையில் 180 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயார்: கலெக்டர் தகவல்

உதகையில், 3வது அலையை எதிர்கொள்ள ஏதுவாக, மேலும் 180 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-23 07:27 GMT

நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 139 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. அத்துடன், தடுப்பு நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தின்  பல பகுதிகளில்,  மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி செலுத்தும் பணியினையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில், கொரோனா 3 அலையை எதிர்கொள்ள ஏதுவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. இது குறித்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏற்கனவே, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனையில் 250 படுக்கைகள் உள்ள நிலையில், மூன்றாம் அலையை எதிர்கொள்ள ஏதுவாக, புதிதாக உதகையிலுள்ள காவலர்கள் சிறுவர் மன்றம் மண்டபத்தில்,  180 படுக்கைகள் கொண்ட படுக்கைகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 18 ஆயிரம் பழங்குடி இன மக்கள் உள்ளனர். இவர்களில்,  15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கும் தடுப்பூசிகள் விரைவில் செலுத்தப்படும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதிக அளவில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏதுவாக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் , மருத்துவமனைகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதாக, அவர் கூறினார்.

Tags:    

Similar News