நீலகிரி ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழு கூட்டம்

நீலகிரி மாவட்ட அளவிலான குழு கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-03-19 10:22 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கான, நீலகிரி மாவட்ட அளவிலான குழு கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான குழு கூட்டம்,  கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்தவும், முழு ஊதியம் வழங்கவும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு மற்றும் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்து தர திட்ட இயக்குனர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவத்துறை சார்பில் மருத்துவக்கல்லூரி முதல்வர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வருவாய்த்துறை மூலம் 18 வயதிற்குள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பினை தளர்த்தும் குழு மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி உபகரணங்கள் மற்றும் திருமண உதவித்தொகை தொடர்பான விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News