நீலகிரியில் நாளை மெகா தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில 295 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 7080 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Update: 2021-09-11 15:36 GMT

உதகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் கொரோனா தடுப்பு ஊசி தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து எல்லை மாவட்டமாகத் திகழும் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் நாளை நடமாடும் கோவிட் 19 சிறப்பு தடுப்பு ஊசி முகாம்கள் நடத்தப்படும் என  தமிழக அரசின் காதி மற்றும் கதர் கிராமிய தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அலுவலரும்,   கோவிட் தடுப்பு ஊசிக்கான கண்காணிப்பு அலுவலருமான சங்கர் கூறினார்.

உதகையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய அவர், தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி இந்த இரு மாவட்டங்களில் தடுப்பு ஊசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும், நாளைய முகாமில் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர்களுக்கும், நீலகிரி மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.

இப்பணியை துரிதமாக மேற்கொள்ள கோவை மாவட்டத்தில் 1475 மையங்களும், நீலகிரி மாவட்டத்தில 295 மையங்களும் ஏற்படுத்தப்பட்டு 7080 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கூறினார். முன்னதாக உதகை அரசு தமிழக மாளிகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஊசி தொடர்பான ஆய்வு கூட்டத்திலும் சங்கர் கலந்துக் கொண்டு ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News