இல்லம் தேடி கல்வி திட்டம்: உதகை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்

நீலகிரியில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து 180 இடங்களில் கலைக்குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

Update: 2021-10-22 12:15 GMT

நீலகிரியில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு.

கொரோனா தொற்று பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி, இழப்புகளை குறைத்திடும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாவட்ட அளவிலான குழு கூட்டம் உதகை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கலெக்டர் அறிவுரைகள் வழங்கினார்.

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தன்னார்வலர்கள் பதிவினை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரியில் 3 கலைக்குழுவினர் மூலம் தெரு நாடகங்கள், பொம்மலாட்டம், நடனம் மற்றும் பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

உதகை கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, நீலகிரியில் 180 இடங்களில் 3 கலைக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. திட்டம் சிறப்பாக செயல்பட மாநில அளவிலான குழு, மாவட்ட அளவிலான குழு, ஒன்றிய அளவிலான குழு, பள்ளி மேலாண்மை குழு என 4 அடுக்கு குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. 6 மாத காலத்திற்கு தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தன்னார்வலர்கள் http:/illamthedikalvi.tn.schools.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்றார்.

Tags:    

Similar News