உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி துவங்கும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி துவங்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்தார்.

Update: 2023-03-29 17:45 GMT

பைல் படம்.

தமிழக சுற்றுலாத் தளங்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மிக முக்கியமான ஒன்றாகும். மலைகளின் அரசி என்றழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கோடை விழாவினை ரசிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இதமான குளுகுளு கோடை சீசனை ரசித்து செல்ல லட்சக்கணக்கானோர் வருவர், அவர்களை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக நடத்தப்படும் கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அனைத்து துறை அதிகார்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் மே 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் முதல் நிகழ்ச்சியான காய்கறி கண்காட்சி நேரு பூங்காவில் மே 6,7ம் தேதியும்,ரோஜா கண்காட்சி ரோஜா பூங்காவில் மே13 முதல் 15 வரையும்,குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியும்,கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும் நடைபெறுகிறது. கண்காட்சிக்காக 170 ரகங்களில் சுமார் 5 லட்சம் மலர்களை உற்பத்தி செய்யும் பணி தொடங்கியுள்ளது என்றார்.

Tags:    

Similar News