உதகை: உர மருந்து குடோனில் தீ விபத்து

தீ விபத்தில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

Update: 2021-10-14 06:30 GMT

உரகுடோனில் ஏற்பட்ட தீவிபத்து. 

உதகை மத்திய பஸ் நிலையம் அருகே தனியார் உர குடோன் உள்ளது. அங்கு விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் உர குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ ரசாயனங்கள் கலந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் பரவியது.

இதனால் தீ கொழுந்து விட்டு மள, மளவென எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் ஊட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி தலைமையில், ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று 2 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அருகே உள்ள குடோனுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த விபத்தில் ரசாயனம் வெடித்து சிதறியது. தொடர்ந்து 2 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் காலியானது. பின்னர் 5 தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, நுரை கலந்து தீயை கட்டுப்படுத்த பீய்ச்சி அடிக்கப்பட்டது. காலை 6 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு முதல் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என பல லட்சம் ரூபாய் மதிப்பில் சேதமடைந்தன. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News