நீலகிரி மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

மாநில அளவிலான சுய உதவிகுழுக்களது உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி, வருகிற ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது

Update: 2022-03-12 01:30 GMT

கலெக்டர் அம்ரித்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம்,  கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவிலான சுய உதவிகுழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி,  வருகிற ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் மகளிர் சுய உதவிகுழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்கள் விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் அமைக்கப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக பதிவு செய்து உள்ள மகளிர் சுய உதவிகுழுக்கள், தங்கள் குழுக்களின் மூலமாகவோ அல்லது தங்கள் குழுவில் உள்ள ஏதேனும் உறுப்பினர் மூலமாகவோ கோடை கொண்டாட்டத்துக்கு தொடர்புடைய பொருட்கள் உற்பத்தி செய்து கொண்டு இருந்தால், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுவின் தீர்மான நகல், உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மாதிரி, உற்பத்தியாளரின் ஆதார் அட்டை, உற்பத்தி பொருள் குறித்து ஏதேனும் பதிவு செய்யப்பட்டு இருந்தால் பதிவு சான்று, உற்பத்தி, விற்பனை செலவினம் மற்றும் விலை நிர்ணயம் குறித்த விவரத்துடன் உதகை பிங்கர்போஸ்டில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் அலுவலகத்தில் வரும்  14-ந் தேதிக்குள் பதிவு செய்து மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News