நீலகிரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பெறுவதற்கு முகாம்கள்

நீலகிரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் பெறுவதற்கு முகாம்கள் நடக்கும் இடங்களை ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

Update: 2023-07-14 16:55 GMT

மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கு விண்ணப்பம் பெறுவது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பதிவு முகாம்கள் முதற்கட்டமாக ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் காலை 9.30 மணி முதல் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமையிலும் நடத்தப்பட உள்ளது.

இந்தநிலையில் பெண்களுக்கு உதவும் வகையில் மாவட்டத்தில் 7 இடங்களில் கட்டுப்பாடு அறைகள் திறக்கப்பட்டு தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் கீழ் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவாறு தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள். மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலை கடைகள் அருகே விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை முகாம் ஆரம்பிக்கும் நாட்களுக்கு முன்னரே நேரடியாக குடும்ப அட்டைதாரர்கள் வீட்டிற்கே சென்று நியாய விலை கடை விற்பனையாளர் விண்ணப்பத்தில் குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்தும், டோக்கனில் முகாமிற்கு வரவேண்டிய நாள், நேரம் ஆகியவற்றை பதிவு செய்தும் வழங்குவார். ஒரு நபர் பல விண்ணப்பங்களை கொண்டு வந்து முகாமில் பதிவு செய்ய இயலாது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பத்தினை அந்த குடும்ப தலைவியே அவருக்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்ப முகாமில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின்கட்டண ரசீது ஆகியவற்றுடன் சமர்ப்பித்து கை விரல் ரேகை மூலம் பதிவுகள் செய்திட வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப் பப்பதிவு முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.

முகாம் நேரம் காலை 9.30 மணி முதல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 5.30 மணி வரை ஆகும். ஞாயிற்று கிழமைகளிலும் முகாம் நடைபெறும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாட்கள் மற்றும் மேல் விபரங்கள் ஏதேனும் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாடு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊட்டி 0423-2450034, 0423-2450035, வட்டாட்சியர் அலுவலகம், ஊட்டி 0423-2442433, வட்டாட்சியர் அலுவலகம், குந்தா 0423-2508123, வட்டாட்சியர் அலுவலகம், குன்னூர் 0423-2206102, வட்டாட்சியர் அலுவலகம், கோத்தகிரி 04266-271718, வட்டாட்சியர் அலுவலகம், கூடலூர் 04262-261252, வட்டாட்சியர் அலுவலகம், பந்தலூர் 04262-220734. பொதுமக்கள் இத்திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாட்கள் மற்றும் ஏனைய விபரங்கள் குறித்த சந்தேகங்களை மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கேட்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News