உதகை: சீல் வைத்தும் வாடகை செலுத்தாத 97 கடைகளின் குத்தகை உரிமம் ரத்து

ஒரு மாதம் கால அவகாசம் அளித்தும் வாடகை செலுத்தாததால், அந்த கடைகள் மறு ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Update: 2021-10-23 12:59 GMT

உதகை நகராட்சி மார்க்கெட் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் வாடகை செலுத்துவதாக தெரிவித்தும் செலுத்தவில்லை. வாடகை செலுத்தாததால் நகராட்சிக்கு ரூ.35 கோடி பாக்கி இருந்தது.

கடும் நிதி பற்றாக்குறையால் நகராட்சி நிர்வாகம் திணறியது. கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி வாடகை செலுத்தாத 757 கடைகளுக்கு நகராட்சி மூலம் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைத்த பின்னர் இதுவரை ரூ.15 கோடிக்கும் மேல் நிலுவைத் தொகை வசூலாகி இருக்கிறது.

சீல் வைத்தும் 183 கடைகளை வைத்து இருப்பவர்கள் வாடகை செலுத்தவில்லை. ஏற்கனவே ஒரு மாதம் கால அவகாசம் அளித்தும் செலுத்தாததால், அந்த கடைகள் மறு ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் 2 வார கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

காலக்கெடு முடிந்ததால் வாடகை செலுத்தாத கடைகளின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி கூறும்போது, உதகை நகராட்சியில் சீல் வைக்கப்பட்ட கடைகளில் வாடகை செலுத்தாத 183 கடைகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு வாடகை செலுத்த இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதுவரை வாடகை செலுத்தாமல் உள்ள 97 கடைகளின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டது. அந்த கடைகள் நகராட்சி வசம் கையகப்படுத்தி பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார்.

Tags:    

Similar News