டீ தூள் கிலோ 3 ரூபாய் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி.!

நீலகிரி மாவட்டம் குன்னூர் டீ தூள் ஏல மையத்தில் அனைத்து ரக டீ தூள்களுக்கு 3 ரூபாய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2021-05-05 01:18 GMT

நீலகிரி மாவட்டத்தில் பச்சைத் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும் தொழிலாளர்களும் வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் கூட்டுறவு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலை தூள் குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு தேயிலை வர்த்தக அமைப்பு சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி, ஆகிய இரண்டு நாட்கள் ஆன்லைனில் ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத் தூளை கொள்முதல் செய்கின்றனர்.

அதன்படி கடந்த 29 , 30,ம் தேதிகளில் விற்பனை எண் 17 க்கான தேயிலை தூள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 23 லட்சத்து 32 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது.

ஏலத்தில் 19 லட்சத்து 84 ஆயிரம் கிலோ தேயிலை தூள் விற்பனையானது. இது 86 சதவிகித விற்பனையாகும். விற்பனையான தேயிலைத் தூளின் மதிப்பு 23 கோடியே 31 லட்சம். அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கு கிலோ ரூபாய் 3 விலை உயர்வு ஏற்பட்டது. சிடிசி தேயிலைத் தூளின் அதிகபட்ச விலை கிலோவிற்கு ரூபாய் 296, ஆர்த்தோடக்ஸ் தேயிலை தூளின் அதிகபட்ச விலை கிலோ 300 என இருந்தது.

சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவிற்கு 98 முதல் 104 வரை உயர்வகை கிலோவிற்கு 115 முதல் 186 வரை ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவிற்கு 96 முதல் 104 வரையிலும் உயர்வகை கிலோவிற்கு 150 முதல் 200 வரை விற்பனையானது. தேயிலை தூள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News