11 வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை : இன்றாவது சிக்குமா புலி?

மசினகுடி வனப்பகுதியில் 11 ம் நாளாக ஆட்கொல்லி புலியைத் தேடி மருத்துவர் குழு, வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-10-05 06:30 GMT

புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர். 

கடந்த 4 நாட்களாக முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் சிங்காரா, குறும்பர் பாடி, பொக்காபுரம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவக் குழு , வன ஊழியர்கள் என 120 க்கும் மேற்பட்டோர் ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த ரோந்து பணியின்போது புலியின் கால் தடம் கண்டறியப்பட்டு அதன்மூலம் பின்தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் புலியை தேடும் பணி நடந்து வருகிறது. 11 ஆவது நாளாக இன்று அதிகாலை 6 மணிக்கு 60 பேர் கொண்ட முதல் குழு வனத்திற்குள் விரைந்தது கால்நடை மருத்துவர்களும் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் வனப்பகுதிக்குள் சென்று உள்ளனர்.

புலியின் கால் தடம் கொண்டு இரண்டு முறை ஆட்கொல்லி புலியை கண்டறிந்துள்ள நிலையில் இன்றாவது புலி சிக்குமா என வனத்துறையினர் தேடுதல் வேட்டைக்கு சென்றனர். தற்போது அடர் வனப்பகுதியில் உள்ள மூங்கில்களுக்கிடையே புலி பதுங்கி இருப்பதால் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு புலிக்கு மயக்க ஊசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 4 கேமராக்கள் மூலம் தேடுதல் பணி தீவிரபடுத்தப்பட்டு புலி நடமாட்டம், அதனுடைய கால்தடம் , உடல் வெப்பநிலை தெறிந்து கொள்ளும் வகையில் அதிநவீன கேமரா வனப் பகுதியில் பறக்க விடப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் உதவியுடன் துள்ளியமான காட்சிகளை பதிவு செய்வதுடன் புதர்களில் புலி மறைந்தாலும் அதை கண்டுபிடிக்க ட்ரோன் கேமராக்கள் தொடர்ந்து பறக்க விடப்பட்டுள்ளது.

இன்று புலியை சுற்றி வளைத்தும் பிடிக்க முடியாத நிலையில் உள்ள வனத்துறை தொடர்ந்து தேடுதல் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது தொடர்ந்து புலியை நெருங்கினாலும் வனத்துறைக்கு இதுவரை புலி சிக்காமல் உள்ளது.

Tags:    

Similar News