கால்நடை மேய்ச்சலுக்கு தடை: மசினகுடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கான அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.

Update: 2022-03-16 07:58 GMT

கால்நடைகளுடன் ஊர்வலமாக வந்து மசினகுடி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, உயர் நீதிமன்ற மதுரை கிளை,  தமிழக வன பகுதியில் கால்நடைகளை மேய்க்க தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த தடையை அமல்படுத்தினால் லட்சக்கணக்கான கால்நடைகள் மற்றும் கால்நடை தொழிலை நம்பி உள்ள மக்கள் பாதிக்கபடுவார்கள் என்பதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில்,  ஆயிரக்கணக்கான நாட்டு மாடுகளை வளர்த்து வரும் மசினகுடி பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள் சார்பாக தடையை நீக்க கோரி மசினகுடியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும், 2006 வன உரிமை சட்டப்படி,  மசினகுடி பகுதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும், இரவு நேர போக்குவரத்து தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்புக் கொடியை கையில் ஏந்தி,  காளை மாடுகளுடன் மசினகுடி பஜாரில் ஊர்வலமாக வந்தனர்.

தொடர்ந்து,  மசினகுடி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள்,  தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். வனச்சரக அலுவலகத்தில்,  கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மசினகுடி ஊராட்சிமன்ற தலைவி மாதேவி மற்றும் பொதுமக்கள் சார்பாக, கோரிக்கை மனு அளிக்கபட்டது.  மனுவை பெற்றுகொள்ள வனத்துறை அதிகாரிகள் இல்லாததால்,  அலுவலக ஊழியரிடம் அளிக்கபட்டது.

Tags:    

Similar News