முதுமலையில் யானைகளுக்கு தொற்றா? வெளியானது பரிசோதனை முடிவு

நீலகிரி முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், எவற்றுக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளதாக, வனத்துறை கூறியுள்ளது.

Update: 2021-06-12 12:56 GMT

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, மனிதர்களை மட்டும் விட்டு வைக்காமல், தற்போது விலங்குகளையும் தாக்கி வருகிறது. அண்மையில் சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வரும் 28, யானைகளுக்கும், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள யானைகளுக்கும்,  முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

குறிப்பாக, தெப்பக்காடு முகாமில் உள்ள இரண்டு வயது குட்டியான ரகு முதல்,  60 வயதை கடந்த மக்னா யானை மூர்த்தி வரை தும்பிக்கையில் இருந்து வெளியேறும் உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மாதிரிகள், உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

தற்போது, பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது அதன்படி, முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளில் எந்தவொரு யானைக்கும் கொரோனா நோய் தாக்கம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இத்தகவலை, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கௌசல் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News