திருச்செங்கோடு:கொரோனா தடுப்பூசி வழங்காததால் பொதுமக்கள் மறியல்
திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகள் வழங்கப்படாததால் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று தடுப்பூசி போடும் படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஏராளமான எண்ணிக்கையில் பொதுமக்கள் காத்திருந்தனர். அங்கு வந்த ஆரம்ப சுகாதார துறை ஊழியர்கள் மருத்துவர்கள் இன்று இந்த மையத்தில் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் தடுப்பூசி போடுவதாக அறிவித்துவிட்டு, தற்போது தடுப்பூசிகள் வழங்கப்படாது என கூறுவது எந்த விதத்தில் நியாயம் என, அங்கிருந்த மருத்துவ அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். அத்துடன், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த திருச்செங்கோடு காவல்துறையினர்,அங்கிருந்த பொதுமக்களை சமாதானம் செய்து, இனி வரும் நாட்களில் அதிக அளவில் இரு தடுப்பூசிகள் அந்தந்த பகுதியில் போடப்படும் என பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் சீத்தாராம்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.