அதிகாரிகள் அலட்சியம்: தொடரும் விபத்து -நடுரோட்டில் தேங்கிய மழைநீரில் நீச்சலடித்து போராட்டம்.!!

சாலை விரிவாக்கத்தின் போது கழிவு நீர் சாக்கடை பகுதியை சரியாக அமைக்காததால், மழைநீர் தேங்குவதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-18 12:30 GMT

திருச்செங்கோடு ராசிபுரம் நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரில் நீச்சல் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எலச்சிபாளையம் பகுதியில் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தன.

இருபுறமும் சாலை விரிவாக்கப் பணிகள் முடிந்த பிறகு சாக்கடை கால்வாய்களை நெடுஞ்சாலை துறையினர் அமைத்தனர். இந்நிலையில் யூனியன் ஆபீஸ் அருகில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்று இருசக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வந்தது.

இதனை சரி செய்ய வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலட்சியப்படுத்தி வந்தனர். தொடர்ந்து தற்போது மழை பெய்து வரும் நிலையில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் குட்டை போல் தேங்கி நிற்பதால் இதனை சரி செய்ய வலியுறுத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், சனிக்கிழமை நேற்று மாலை திடீரென மழை பெய்ததால் மழை நீரில் நீச்சல் அடிக்கும் போராட்டத்தை நடத்தினார். இதனால் எலச்சிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர். நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் சு.சுரேஷ் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் கே.எஸ்.வெங்கடாசலம் ஆர். ரமேஷ். கூட்டுறவு இயக்குனர் பி.மாரிமுத்து. மற்றும் ரவி. உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News