சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சுப் போட்டி
ராசிபுரத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் பேச்சு போட்டி, கலெக்டர் உமாவின் தலைமை;
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சுப்போட்டி
ராசிபுரம்: ராசிபுரம் அருகே பாச்சலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சுப்போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 480-க்கும் அதிகமான மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி உமா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு. ராஜேஷ்குமார் எம்.பி., திரு. ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போட்டியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திரு. மதிவேந்தன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.பி. திரு. ராஜேஷ்குமார் பேசுகையில், "ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற தத்துவத்தை மனித குலத்திற்கு அளித்து மொழி சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த மொழி தமிழ் மொழி. தாய் மொழியின் முக்கியத்துவத்தை அறிந்த ரஷ்யா, ஜெர்மனி நாட்டினர் இன்றளவும் தாய் மொழியில் தான் கல்வி கற்பித்து வருகின்றனர். ஆங்கிலம் என்பது தொடர்பு மொழி மட்டுமே" என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் கான்ஸ்டைன் ரவீந்திரன், முனைவர் ஹாஜாகனி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருமதி கிருஷ்ணவேணி, தனியார் கல்லூரி நிறுவனர் திரு. நடராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.