குமாரபாளையம் அருகே இரவு முழுவதும் கிணற்றில் தத்தளித்த இளைஞர்: படுகாயங்களுடன் மீட்பு
குமாரபாளையம் அருகே செல்போனில் பேசியவாறு சென்ற இளைஞர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.;
தீயணைப்புதுறையினரால் மீட்கப்பட்ட இளைஞர்.
குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் புதன் சந்தை பகுதியில் வசிப்பவர் பாக்யராஜ், 22. இவர் வெப்படை பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் மில் அருகே தன்னுடைய செல்போனில் பேசியவாறு சென்றுள்ளார். ஆனால் வழியில் விவசாய கிணறு இருந்ததை அறியாமல் அதில் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவர், இரவு நேரம் என்பதால் நீண்ட நேரம் கூச்சலிட்டும் யாரும் வரவில்லை.
இரவு முழுவதும் நீரில் தத்தளித்த அவரை, நேற்று காலை அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்ற முயற்சித்தனர். முடியாமல் போகவே, வெப்படை தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் நிலைய அலுவலர் சிவகுமார் தலைமையில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஒரு மணி நேரம் போராடி கிணற்றில் தவறி விழுந்த நபரை உயிருடன் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வெப்படை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.