பள்ளிபாளையம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் பெண்கள் துறவறமேற்கும் நிகழ்வு

பள்ளிபாளையம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் பெண்கள் 3 பேர் துறவறமேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2021-10-20 14:30 GMT

பள்ளிபாளையத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடந்த மூன்று பெண்கள் துறவறமேற்கும் நிகழ்வில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் துறவிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

பள்ளிபாளையத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் லட்சுமி, சரஸ்வதி, கயிலை ஆகிய மூன்று பெண்கள் துறவறமேற்கும் நிகழ்வு எஸ்.பி.பி. காலனி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் கோட்ட செயலாளர் சபரிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பங்கேற்று வாழ்த்தினார்.

இவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பக்தி மார்க்கத்தில் இருக்க கூடிய மூன்று பெண்களுக்கு துறவறம் ஏற்பு நிகழ்ச்சி துவக்கி வைக்க வந்துள்ளேன். துறவறத்தைப் பிட்சா வந்தனம் என்றும் சொல்வார்கள். தமிழகத்தில் ஏராளமான பெண் சந்நியாசிகள் தேவைப்படுகிறார்கள்.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப ஏராளமான கன்னிமார்கள், பாதிரியார்கள் உள்ளனர். குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆக்கிரமிப்புகள் எங்கு இருந்தாலும் சொல்லுங்கள், மீட்டுத் தருகிறேன் என்கிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சென்ற குழந்தைகள் மிரட்டப்படுகிறார்கள். மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு சிவ சின்னத்தை அவமதிப்பது தமிழரின் பண்பாட்டை அவமதிப்பதாகும். அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 381 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது நல்ல மாற்றம். அடுத்து வரக்கூடிய நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும். அடுத்து தமிழகத்தில் பா.ஜ. க. ஆட்சி அமையும். பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. லஞ்ச ஊழல் ஆட்சி நடத்துவது நடக்காது. தமிழகத்தில் தி.மு.க. வீழ்த்தப்பட்டு பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என அவர் கூறினார்.

அகில பாரத துறவிகள் சங்க ராமானந்தா சுவாமிகள் பங்கேற்று தீட்சை வழங்கினார். இந்த நிகழ்வில் மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்து துறவிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News