கோவில் திருவிழாவால் பள்ளிக்கு மிகக் குறைவாக வந்த மாணவ, மாணவியர்

குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விடுமுறை விடாததால் மாணாக்கர்கள் வருகை மிகக் குறைவாக இருந்தது.

Update: 2022-03-09 15:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவிற்கு பூ மிதித்தல், தேர்த்திருவிழா நடைபெறும் புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் விடுமுறை விடப்படுவது வழக்கம். குமாரபாளையம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் புதன்கிழமை மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கொரோனா விடுமுறைக்கு பின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 6 நாட்கள் வேலை நாட்கள் என்பதால், எந்த நாளில் அதனை சமன் செய்வது என்பது தெரியாமல் விடுமுறை விடப்படாமல் உள்ளதாக மாணவர்கள் சிலர் கூறினர்.

திருவிழா முதல்நாளான நேற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 375 பேரும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 473 பேர் மட்டுமே வந்தனர். இது மொத்த மாணாக்கர்கள் எண்ணிகையில் 30 சதவீதத்திற்கும் குறைவானதே.

இது பற்றி மாணவர்கள் கூறுகையில், உள்ளூர் திருவிழா நாங்கள் மிகுந்த உற்சாகமாக கொண்டாட எண்ணியிருந்தோம். ஆனால் பள்ளி விடுமுறை இல்லை என்றதும் மிகவும் வருத்தமடைந்தோம். இந்த விடுமுறை செயல்பாடுகள் எல்லாம் ஒரு வாரம் முன்னதாக ஏற்பாடு செய்திருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களும் மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்க தயங்கியதால் இந்த நிலை ஏற்பட்டது. எங்கள் பெற்றோர்களும் மிகவும் வருத்தமுற்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News