குமாரபாளையம் அருகே நீதிமன்றம் கட்ட உள்ள இடத்தை மாவட்ட நீதிபதி ஆய்வு

குமாரபாளையம் அருகே நீதிமன்றம் கட்ட உள்ள இடத்தை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்தார்.

Update: 2023-05-16 13:00 GMT

குமாரபாளையம் அருகே நீதிமன்றம் கட்ட உள்ள இடத்தை  மாவட்ட நீதிபதி குணசேகரன்  ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் அருகே நீதிமன்றம் கட்ட மாவட்ட நீதிபதி ஆய்வு செய்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மாவட்ட நீதிபதியிடம் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை, எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே தற்காலிகமாக நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. சொந்த கட்டிடம் கட்ட பல இடங்களில் ஆய்வு செய்த நிலையில், நேற்று ஆனங்கூர் சாலை மேட்டுக்கடை பகுதியில் இடம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாவட்ட நீதிபதி குணசேகரன் பங்கேற்று ஆய்வு செய்தார். இந்த நிலத்தின் அருகே உயர் அழுத்த மின் கோபுரங்கள் செல்வதை கண்டு, மின்வாரிய அதிகாரிகள் வசம் விபரங்கள் கேட்டறிந்தார்.

இந்நிலையில் இந்த இடத்தில நீதிமன்றம் கட்டினால் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை, வெகு தொலைவு, மின்வாரிய உயர் கோபுர விபத்து அபாயம், பொதுமக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களை வலியுறுத்தி இந்த இடத்தில் நீதிமன்றம் கட்ட குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆட்சேபம் தெரிவித்து,சங்க தலைவர் சரவணராஜன் தலைமையில் மாவட்ட நீதிபதி குணசேகரனிடம் மனு வழங்கப்பட்டது. வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ஐயப்பன், நடராஜன், நாகப்பன், உதயகுமார், வெங்கடேசன், ராமசாமி, உள்பட பலர் பங்கேற்றனர்.

இது பற்றி பொதுமக்கள் கூறியதாவது:-

நீதிமன்றம் கட்ட மேட்டுக்கடை சரியான இடம் அல்ல. ஏனெனில் போதுமான பஸ் வசதி கிடையாது. அதிக குடியிருப்புகள் அப்பகுதியில் கிடையாது. மக்கள் நடமாட்டமும் அதிகம் இருக்காது. இதனால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். வழக்கு சம்பந்தமாக இந்த இடத்திற்கு பெண்கள் வந்து செல்வது என்பது சாத்தியமானது அல்ல. பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படும். ஆளில்லாத இடத்தில் பெண்கள் காத்திருந்து பேருந்தில் ஏறவும் முடியாது. சமீபத்தில் பள்ளிபாளையம் பகுதியில் வயதான மூதாட்டிகளை கொலை செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News