தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்கம், வெள்ளி பரிசு: குமாரபாளையம் நகராட்சி
குமாரபாளையத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்கம், வெள்ளி பரிசு என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு கூறுகையில், குமாரபாளையம் நகரில் சத்துணவு மையங்கள், நகராட்சி பள்ளிகள் மற்றும் நடமாடும் நான்கு வாகனங்கள் ஆகியவற்றில் நாளை (23ம் தேதி) கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பயனாளிகளுக்குக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுத் தங்க நாணயம், வெள்ளி நாணயங்கள் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்படும். அனைவரும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா இல்லாத நகராட்சியாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.