மாணவனை வகுப்பறையில் பூட்டிய அரசு பள்ளி : டி.இ.ஓ., வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

குமாரபாளையத்தில் மாணவனை வகுப்பறையில் பூட்டி சென்ற அரசு பள்ளியில் டி.இ.ஓ. மற்றும் சி.இ.ஓ. ஆய்வு செய்தனர்.

Update: 2021-11-24 13:00 GMT

குமாரபாளையத்தில் மாணவனை உள்ளே வைத்து பூட்டிச் சென்ற அரசு பள்ளியில் டிஇஓ, பிஇஓ ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் சந்துரு,  இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் பள்ளியில் உள்ள தனி அறையில் உறங்கியதாக கூறப்படுகிறது. பள்ளி வேலை  நேரம் முடிந்ததும் அனைவரும் பள்ளியின் வகுப்பறைகள், முன்புற மெயின் கேட் எல்லாம் பூட்டி விட்டு நேற்று முன் தினம் மாலை 05:00 மணியளவில் சென்று விட்டனர்.

இரவு 09:20 மணியளவில் பள்ளியின் உள்ளே இருந்து மாணவனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இது பற்றி அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் பள்ளியின் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆசிரியர்கள் சிலர் கதவை திறந்து மாணவனை வெளியே அனுப்பி வைத்தனர்.

ஆசிரிய, ஆசிரியைகளின் இந்த மெத்தனப்போக்கு பொதுமக்களை அதிருப்தியடைய வைத்தது. மாணவனுக்கு தாய் இல்லை. தந்தை விசைத்தறி கூலித்தொழிலாளி. தினமும் வேலை முடிந்து இரவு 09:30 க்குத்தான் வருவார் என்பதால் அவருக்கும், தன் மகன் வீட்டுக்கு வராத தகவல் தெரியாமல் போனது.

இது சம்பந்தமாக டி.இ.ஓ., விஜயா, வட்டார கல்வி அலுவலர்  மேகலாதேவி ஆகியோர்  நேரில் ஆய்வு செய்து, இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என, பள்ளியின் தலைமை ஆசிரியை பொன்னியை அறிவுறுத்திச்  சென்றனர். பி.டி.ஏ. கவுரவ தலைவர் பிரகாஷ் உடனிருந்தார்.

Tags:    

Similar News