'ஆமை வேகத்தில்' நடைமேடை பணி: குளமாகிய குமாரபாளையம் சாலைகள்
குமாரபாளையத்தில், மந்தகதியில் நடைபெறும் நடைமேடைப்பணிகளால், ஆங்காங்கே மழைநீர் தேங்கி, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.;
குமாரபாளையத்தில், நடைமேடை பணி தாமதத்தால், குளம் போல் ரோட்டில் தேங்கியுள்ள மழைநீர்.
குமாரபாளையத்தில், சேலம் சாலை கத்தேரி பிரிவு முதல், போலீஸ் ஸ்டேஷன் வரை, வடிகால் அமைக்கப்பட்டு, நடைமேடை அமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணி, மந்தகதியில் நடப்பதால், மக்கள் பல்வேறு வகையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, நேற்று மாலை 06:00 மணியளவில், குமாரபாளையம் பகுதியில் கனமழை பெய்தது. சேலம் சாலை உள்ளிட்ட பல ரோடுகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் சாலையில், ஒ.வி.கே. பெட்ரோல் பங்க், பஸ்கள் வெளியில் வரும் பகுதி, ஜே.கே.கே. பங்களா எதிரில், ஆனங்கூர் பிரிவு சாலை, சரவணா தியேட்டர் அருகில் உள்ளிட்ட நடைமேடை அமைத்த பகுதிகளில் மழைநீர் வடிகாலில் சேர வழியின்றி, குளம் போல் தேங்கி நின்றது.
இதனால், சாலையில் சென்ற வாகனங்களால் தண்ணீர் தெறிக்க, அருகில் உள்ள வியாபாரிகள், டூவீலர் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழை நின்ற பின்னர், தேங்கிய மழைநீரானது சகதியுமாக மாறி, பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் நடைபாதைப்பணிகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். சாலையில் மழைநீர் தேங்காமல், அனைத்து நீரும் வடிகாலில் சேரும் வகையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குமாரபாளையம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.