பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு பள்ளி மாணவி

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த அரசு பள்ளி மாணவி, அதே மருத்துவமனையில் பெண் டாக்டராக பணியில் சேர்ந்தார்.

Update: 2024-03-29 11:42 GMT

டாக்டர் சாந்தலட்சுமி.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த அரசு பள்ளி மாணவி, அதே மருத்துவமனையில் பெண் டாக்டராக பணியில் சேர்ந்தார்.

குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, முருங்கைக்காடு பகுதியில் வசிப்பவர் பானு (வயது 53.) இவரது கணவர் உடல்நலமில்லாமல் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவர்களுக்கு புவனேஸ்வரி( 31,)  சாந்தலட்சுமி(,29) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். கைத்தறி கூலி வேலை செய்து இருவரையும் வளர்த்து ஆளாக்கினார் இவரது தாயார் பானு.


மூத்த மகள் புவனேஸ்வரி டிப்ளோமா இன் கார்மெண்ட்ஸ் டெக்னாலஜி படித்துள்ளார். இளைய மகள் சாந்தலட்சுமி தற்போது டாக்டராகி, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று பணியில் சேர்ந்தார். இவரை தலைமை டாக்டர் பாரதி, டாக்டர் அருண், நர்ஸ் மேற்பார்வையாளர் சாந்தி உள்பட பலரும் வாழ்த்தினார்கள். சாந்தலட்சுமி இதே மருத்துவமனையில் 1995ம் ஆண்டு பிறந்தவர் என்பதும், குமாரபாளையம் அரசு பள்ளியில் பயின்று, தற்போது டாக்டராக பணியில் சேர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டாக்டர் சாந்தலட்சுமி கூறியதாவது:-

நான் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் 1995ம் ஆண்டு, அக்டோபர் 8ல் பிறந்தேன். இதே ஊரில் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்று, இதே ஊரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை பயின்றேன். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 479 மதிப்பெண்கள் பெற்றேன். அதிக மதிப்பெண்கள் பெற்றதால், எனக்கு குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் பள்ளியில் இலவசமாக பிளஸ் டூ படிக்க வாய்ப்பு கொடுத்தனர். பிளஸ் டூ தேர்வில் ஆயிரத்து 115 மதிப்பெண்கள் பெற்றேன். கவுன்சிலிங்கில் 197.5 கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தேன்.

அரசு பணி கிடைக்கப்பெற்று தாராபுரம், குண்டடம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தேன். மேல் படிப்புக்கு வாய்ப்பு கிடைத்து, கடலூர் மருத்துவக்கல்லூரியில் காது, மூக்கு, தொண்டை படிப்பான ஈ.என்.டி. மருத்துவ படிப்பில் சேர்ந்தேன். தற்போது படித்து முடித்து, நான் பிறந்த குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்துள்ளேன். இது எனக்கும், என் குடும்பத்தாருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இவருக்கும், சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பொறியாளர் ஜெகதீஷ் என்பவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

Tags:    

Similar News