குமாரபாளையம் அருகே சவுண்டம்மன் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல் விழா
குமாரபாளையம் அருகே சவுண்டம்மன் திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடுதல் விழா நடந்தது.;
குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் விழா கோவில் வளாகத்தில் நடந்தது.
குமாரபாளையம் அருகே சவுண்டம்மன் திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடுதல் விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் விழா கோவில் வளாகத்தில் நடந்தது. கணபதிஹோமம் நடத்தப்பட்டு, முகூர்த்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கு வெட்டப்பட்ட குழிக்குள் நவதானியங்கள், பஞ்ச உலோகங்கள், பால், பூக்கள் உள்ளிட்டவைகள் போடப்பட்டு, முகூர்த்தக்கால் நடப்பட்டது.
முகூர்த்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதன் பின் பூணூல் திருவிழாவையொட்டி அனைவரும் பூணூல் அணிந்து கொண்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஆக. 29 கணபதி பூஜை, சக்தி அழைத்தல், தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெறவுள்ளன. அதே நாளில் அம்மனுக்கு பெரிய பொங்கல், மாலையில் பெண்மக்கள் சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
கிராமத்து தெய்வ வழிபாடு குறித்து ஆன்மீக அன்பர்கள் கூறியதாவது:
கிராமப்புற மக்களால் வழிபடப்பெறும் இத்தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்களாகும். இத்தெய்வங்களின் வரலாறு மக்களால் நன்கு அறியப்பட்டவையே. இத்தெய்வங்களின் தோற்றங்களுக்குப் பல வாய்மொழிக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இத்தெய்வங்கள் மக்களுள் மக்களாக வாழ்ந்து, தானாகவோ, ஊர் நன்மைக்காகவோ அல்லது குறிப்பிட்ட சிலரால் வன்கொலை செய்யப்பட்டோ உயிரிழந்தவர்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண் தெய்வங்கள் கொல்லப்பட்டு இறந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஊரில் ஏற்படும் நோய்க்கும், மழை பெய்யாமைக்கும் இத்தெய்வங்களே காரணம் என்று நம்பினர். எனவே அவற்றுக்கு வழிபாடுகள் செய்து மக்கள் தெய்வங்களாக வணங்கினர். அவ்வாறு வணங்கப் பெறும் தெய்வங்களுள் பெரும்பான்மை பெண் தெய்வங்களே என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பெண் தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், பொதுத் தெய்வங்கள், இனத்தெய்வங்கள், குலதெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், பத்தினித் தெய்வங்கள், காவல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள் எனப் பலநிலைகளில் வணங்கப்படுகின்றன. இப் பெண் தெய்வங்கள் அம்மன் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். இத்தனை பெண் தெய்வங்கள்தான் என்று எண்ணிக்கையில் சொல்லமுடியாத அளவுக்கு பெண் தெய்வங்கள் சமூகத்தில் வழிபடப்பட்டு வருகின்றன.
நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், நீர்நிலைகளுக்கு அருகில் உறைவதாக நம்பினர். முறையான கோயில் அமைப்போ, சிலை வடிவமோ இல்லாமல், சாதாரணமாக ஒரு கல்லிலோ அல்லது மரத்திலோகூட தெய்வம் உறைவதாக மக்கள் நம்புகின்றனர்.
இத்தெய்வங்களுக்கு விரதமிருந்தும், உயிர்பலி கொடுத்தும் வழிபாடு செய்யப்படுகின்றது. இவை மட்டுமல்லாமல் வேண்டுதல், நேர்த்திக்கடன், தீமிதித்தல், தேர் இழுத்தல் போன்றனவும் வழிபாட்டு நிலையில் அடங்கும். பெருந்தெய்வங்களைப் போல தினசரி பூசைகளோ, படையல்களோ இத்தெய்வங்களுக்குச் செய்வதில்லைநாட்டுப்புறத் தெய்வங்கள் பரவலாக எல்லோராலும் வணங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.