வாக்குறுதியாகவே இருக்கும் வாரச் சந்தை மேற்கூரை, சிமெண்ட் தளப் பணிகள்

குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம், வார சந்தை சிமெண்ட் தளம் ஆகியவை கோரிக்கைகளாகவே இன்று வரை இருந்து வருகிறது.

Update: 2022-02-13 10:45 GMT

குமாரபாளையம் வாரச்சந்தை மழைநீரால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.

குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூலுக்கு சாயம் போட 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன.

இதிலிருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் நேரடியாக காவிரில் கலப்பதால் குடிநீர் விஷமாக மாறும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாயப்பட்டறைகளை இடித்தும், சாயமிடப்பட்ட நூல்கள் மீது ஆசிட் ஊற்றியும் வருகிறார்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சாயப்பட்டறை பிரச்சனைக்கு தீர்வு காண பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சாயப்பட்டறை உரிமையாளர்களின் பங்களிப்பும் செய்ய வேண்டும் என்பதால், கால தாமதம் ஆனது.

தற்போது இடம் வாங்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்த நிலையில் மேலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எந்த பகுதியில் இதற்காக நிலம் வாங்க எண்ணினாலும், அப்பகுதி மக்கள் விவசாய நிலங்கள் இதனால் பாதிக்கப்படும் என்று கூறி வருவதால் தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வு காணப்பட்டால்தான் காவிரி நீர் மாசு அடைவதை தடுக்க முடியும்.

இதேபோல் குமாரபாளையத்தில் சின்னப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வாரச் சந்தை உள்ளது. இங்கு பிரதி வெள்ளிக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் அருகில் உள்ள கிராமப்பகுதி மக்களும் பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். இது இன்று வரை மண் தரையாக உள்ளது.

மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பொருட்களும் தண்ணீரில் நனைந்து வீணாகிறது. இதனால் வியாபாரிகள் கடும் நஷ்டம் அடைந்து வருகிறார்கள். இதனாலேயே பல வியாபாரிகள் இந்த சந்தைக்கு வருவதை தவிர்த்து வருகிறார்கள். பொதுமக்களும் மழை வந்தால் சந்தைக்கு வருவதை தவிர்த்து வருவது வாடிக்கையாகிவிட்டது.

வாக்குறுதியாக இருந்து வரும் பொது சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வாரச் சந்தை வியாபாரிகளுக்கு சிமெண்ட் அட்டை மேற்கூரைகளும், தரையில் சிமெண்ட் தரை தளமும் அமைக்கும் பணிகளை புதிதாக வரும் நகரமன்ற நிர்வாகிகள் செயல்படுத்திட முயற்சி செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News