தனியார் பேருந்து நடத்துனர் ஓட்டுனரின் செயலால் மக்கள் அதிருப்தி
குமாரபாளையத்தில் தனியார் பேருந்து நடத்துனர், ஓட்டுனர் அரசு பேருந்தை விட மறுத்து தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது;
குமாரபாளையத்தில் தனியார் பேருந்து நடத்துனர், ஓட்டுனர் அரசு பேருந்தை விட மறுத்து பேருந்தை முடக்கி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புறப்படும் நேரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அரசு பேருந்தை , தனியார் பேருந்து நடத்துனர், ஓட்டுனர் ஆகியோர் பேருந்தை மறித்து நிறுத்தி வைத்து முடக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமாரபாளையத்திலிருந்து ஈரோட்டிற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. ஈரோடு ஜவுளி சந்தைக்கு , குமாரபாளையம் நகரில் உற்பத்தியாகும் விசைத்தறி ஜவுளி ரகங்களை விற்பனைக்கு பேருந்தில் கூட கொண்டு செல்வது வழக்கம்.
மேலும் குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் ஈரோடு மார்க்கெட்டிலிருந்து எடுத்து வருவதும் வழக்கம். குமாரபாளையம் அருகே உள்ள பெரிய நகர பகுதி என்பதால், பொதுமக்கள் ஜவுளிகள், நகைகள் வாங்கவும், வருடாந்திர மளிகை பொருட்கள் வாங்கவும் ஈரோட்டுக்கு பேருந்துகளில் சென்று வருகின்றனர்.
மேலும் உடல்நலம் சரியில்லாத நபர்களை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும், மிகவும் ஆபத்தான நிலை என்றால், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு நோயாளியை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து விடுகிறார்கள். இதனால் நோயாளிகளை பார்க்கவும் ஈரோட்டிற்கு பேருந்துகள் மூலம் சென்று வருகிறார்கள். சில தனியார் மருத்துவமனைகளும் இருப்பதால், அங்கும் பொதுமக்கள் சென்று வருகிறார்கள். ஈரோடு பேருந்து என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 03:30 மணியளவில் டைமிங் தகராறு காரணமாக தனியார் பேருந்து, அரசு பேருந்தை செல்ல விடாமல், பேருந்தின் முன்பு, தனியார் பேருந்தை நிறுத்திக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இவர்களுக்கு பின்னால் வந்த பேருந்துகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பயணிகள் அவதி ஆளாகினர். டைமிங் தகராறு என்றால், ஒரு இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும். அல்லது போலீசில் சொல்லி தீர்வு காண வேண்டும். இவ்வாறு செய்வதால் இதர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.