குமாரபாளையம் அருகே அரசுப் பள்ளியில் காவலர் வீர வணக்க நாள் அனுஷ்டிப்பு
குமாரபாளையம் அருகே அரசுப் பள்ளியில் பணியின்போது உயிரிழந்த காவல்துறையினருக்கு வீர வணக்க நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
நாடு முழுதும் பணியின்போது வீர மரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக அக். 21 ஆண்டுதோறும் காவலர் வீர வணக்க நாளாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
குமாரபாளையம் போலீசார் சார்பில் அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வீர வணக்கம் செலுத்தும் விதமாக மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேல் தலைமை வகித்தார். விளையாட்டு போட்டிகளை இன்ஸ்பெக்டர் ரவி துவக்கி வைத்தார்.
இன்ஸ்பெக்டர் ரவி பேசுகையில், அரசு பள்ளியில் பயின்று பல சாதனையாளர்கள் வாழ்வில் முன்னேறி, மற்றவர்களையும் முன்னேற்றியுள்ளனர். அரசு பள்ளியில் தற்போது மாணவ, மாணவர்களுக்கு சீருடைகள், பாட புத்தகங்கள், நோட்டுகள், பேனா, பென்சில், பேக் உள்ளிட்ட பல உதவிகள் செய்து வருகிறார்கள். உயர்கல்வி மற்றும் அரசு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கி வருகிறார்கள். நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என அவர் பேசினார்.
பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ரவி ,எஸ்.ஐ. மலர்விழி, விடியல் பிரகாஷ், பி.டி.ஏ. நிர்வாகிகள் உள்பட பலர் பரிசு வழங்கினர்.