வேளாண் சட்டங்களுக்கு எதிராக பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, பள்ளிபாளையத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதியில், இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்பிபி பகுதி எல்.பி.எப். பாலசுப்பிரமணி, தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றிட வேண்டும்; விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த வேண்டும்; அனைவருக்கும் இரு முறை தடுப்பூசி உடனே செலுத்த வேண்டும்; கொரோனா நிவாரணமாக வருமான வரி வரம்புக்குள் வராத குடும்பத்திற்கு மாதம், ₹7000 ரொக்கம், நபர் ஒன்றுக்கு 10 கிலோ உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏ.ஐ.டி.யு.சி, ஏ.ஐ.சி.சி.டி.யு, எல்.டி.யு.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.