ஊரடங்கு தளர்வு: இன்றே பரபரப்பாக காணப்பட்ட பள்ளிபாளையம் சாலைகள்
கடைகள் அனைத்தும் நாளை முழுமையாக திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிபாளையம் சாலைகள் அதிக வாகனப் போக்குவரத்துடன் இன்றே பரபரப்பாக காணப்பட்டன.;
பள்ளிபாளையம் பிரதான சாலைகளில், வழக்கத்தைக் காட்டிலும், இன்று வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு திங்கட்கிழமை முதல் பேருந்துகள் இயங்கவும், பேக்கரி டீ கடைகளில் அமர்ந்து சாப்பிடலாம் என்றும் அனுமதி தந்துள்ளது. பஸ் போக்குவரத்தும் நாளை முதல் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், பள்ளிபாளையம் பிரதான சாலைகளில் உள்ள கடைகள் பலவும் இன்று முழுமையாக திறக்கப்பட்டதால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும், வழக்கத்தைவிட அதிகமான வாகனப் போக்குவரத்து காணப்பட்டது. இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் பரபரப்பாக சாலைகளில் சென்று கொண்டிருந்தன.
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு பள்ளிபாளையம் நகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.