குமாரபாளையத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ., தங்கமணி
குமாரபாளையத்தில் வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு எம்.எல்.ஏ., தங்கமணி நன்றி தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மாநிலம் முழுதும் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணமாக ஊரடங்கு அறிவித்ததால் எம்.எல்.ஏ,. தங்கமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணி, காலம் தாழ்ந்து கொண்டே போனது.
சமீபத்தில் நடந்த ரேஷன் கடை துவக்க விழாவில் பேசியபோது கூட தங்கமணி இதனை சொல்லி, வெகு விரைவில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வருவேன் என்றார். அதன்படி எம்.எல்.ஏ., தங்கமணி காவேரி நகர் காளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தபடி சென்றார்.
பொதுமக்கள் வழி நெடுக ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தங்கள் குறைகளை பலரும் கோரிக்கை மனுவாக கொடுத்தனர். அதனை படித்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அ.தி.மு.க. 50 வது ஆண்டு பொன்விழாவையொட்டி கட்சி தொண்டர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த கேக்கை வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து வழங்கினார். 100க்கும் மேற்பட்ட டூவீலர்களில் அ.தி.மு.க. கட்சி கொடியை கட்டியவாறு தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர்.