குமாரபாளையம்: சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
பிரதோஷ நாளையொட்டி குமாரபாளையம் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.;
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை 13ஆம் நாள் திரயோதசி திதி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. மேலும் பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு உகந்த காலமாக இருக்கிறது. பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கு சகல, சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேர பிரதோஷ வேளையில் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்வது சிறப்பு.
சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷத்தை மகா பிரதோஷம் என்று கூறுவார்கள். இந்தநாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பிரதோஷ நாளையொட்டி குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், அங்காளம்மன் கோவில் சவுண்டம்மன் கோவில்கள், கள்ளிபாளையம் சிவன் கோவில், தேவூர் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.