பஸ் ஸ்டாண்டை பாராக்கும் 'குடி'மகன்கள் - குமுறும் குமாரபாளையம்வாசிகள்
குமாரபாளையத்தில் ‘குடி’ மகன்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது; பஸ் ஸ்டாண்ட் திறந்தவெளியை பாராக மாற்றி வருகின்றனர்.;
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய திறந்த வெளிப்பகுதியில் மது அருந்துவோரால், பொதுமக்கள் நடமாட அஞ்சுகின்றனர்.
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள், பஸ்களில் ஏறியும், இறங்கியும் வருகிறார்கள். அதே நேரம், ஆதரவற்றவர்கள், நோயாளிகள் என பலதரப்பட்டவர்கள், பஸ் ஸ்டாண்டு வளாகத்தில் தங்குகின்றனர். சிலர், யாசகம் பெற்று உணவு உண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இடைப்பாடி பஸ்கள் நிற்கும் இடத்திற்கும், சேலம் பஸ்கள் நிற்கும் இடத்திற்கும் இணைப்பு பாதை உள்ளது. இதில் பல 'குடி'மகன்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை திறந்த வெளி பாராக எண்ணி, மது குடித்து வருகிறார்கள். இதனால் இவ்வழியே வரும் பெண்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது. குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு, இந்த பாதையை அடைத்து, பொதுமக்கள் வேறு பாதையில் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.