குமாரபாளையம்: 21 கவுன்சிலர்கள் பங்கேற்ற நகரமன்ற முன் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற, முதல் நகரமன்ற முன் ஆலோசனை கூட்டத்தில் 21 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-03-19 13:15 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முதல் நகரமன்ற கூட்ட முன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற  21 கவுன்சிலர்கள்.

குமாரபாளையம் நகராட்சி தலைவராக விஜய்கண்ணன் பொறுப்பேற்ற பின், வரும் வாரத்தில்,  முதல் நகரமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்கும், நகரமன்ற கூட்ட முன் ஆலோசனை கூட்டம், நகராட்சித் தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில், நடைபெற உள்ள முதல் நகரமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள், வார்டுகளில் உள்ள அத்தியாவசியமான தேவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்து,  முதல் நகர்மன்ற கூட்டத்திற்கான ஜாபிதா எனப்படும் பணி மற்றும் தீர்மான விபரங்கள் விவாதிக்கப்பட்டன.

இந்த ஆலோசனை கூட்டத்தில், விஜய்கண்ணன் ஆதரவு 17 கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் கதிரவன், ராஜ், புஷ்பா சார்பில் மகன் ஐயப்பன் ஆக 21 பேர் பங்கேற்றனர். தி.மு.க. கவுன்சிலர்கள் மூவருக்கும் சேர்மன் விஜய்கண்ணன் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.

Tags:    

Similar News