கூலி கேட்டவர் மீது தாக்குதல் உள்பட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்

கூலி கேட்டவர் மீது தாக்குதல் உள்பட குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

Update: 2024-02-20 12:47 GMT

குமாரபாளையத்தில் விசைத்தறி கூலி கேட்டவருக்கு அடி, உதை கொடுத்த முதலாளி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் நரசிம்மன்(வயது56). விசைத்தறி கூலி தொழிலாளி. இவர் முருங்கைக்காடு சுந்தரரராஜ் (வயது60), என்பவர் விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் சம்பளம் சரியாக கொடுக்காததால், வேறு இடத்தில் பணியில் சேர்ந்ததாக தெரிகிறது. ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் ஒரு வார கூலி வரவேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. பிப். 17 காலை 08:00 மணியளவில், நரசிம்மன், அவர் தம்பி கிருஷ்ணன், (52) ஆகிய இருவரும், நரசிம்மன் வீட்டின் முன்பு நின்றிருந்த போது, அவ்வழியே சென்ற சுந்தரராஜ் வசம், தனக்கு வரவேண்டிய ஒரு வார கூலியை தர வேண்டி கேட்க, வழியில் போகும் போது கூலி கேட்கிறாயா? எனக்கூறி, சுந்தரராஜ் , நரசிம்மனை அடித்ததாக தெரிகிறது.

இதனால் நரசிம்மன் தம்பி கிருஷ்ணன், நரசிம்மன் மனைவி ஆகியோர், சண்டை போட்ட சுந்தரராஜை விலக்கி விட்டுள்ளனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்து, சுந்தரரராஜ் மற்றும் அவருடன் வந்த சரவணன், (46), மற்றும் இருவர், நரசிம்மன் தம்பி, மனைவியை தாக்கியதில் கிருஷ்ணன் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுந்தரராஜ், சரவணன் இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

குமாரபாளையத்தில் டூவீலரில் சென்ற பெண்ணிடம் டூவீலரில் வந்த இரு இளைஞர்கள் தங்க செயின் பறித்து சென்றனர்.

குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதியில் வசிப்பவர் சுமதி, (45). இவர் பிப். 15ல் காலை 08:00 மணியளவில் பள்ளிபாளையம் சாலை, காந்திபுரம் பகுதியில் தனது சுசுகி அக்சஸ் டூவீலரில், தனியார் பள்ளியில் படிக்கும் தன் மகனுக்கு உணவு கொடுக்க சென்று கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு அருகே டூவீலரில் வந்த இளைஞர்கள் இருவரில் பின்னால் உட்கார்ந்த நபர், சுமதி கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனர். வண்டி ஓட்டிய நபர் ஹெல்மெட் அணிந்தும், பின்னால் உட்கார்ந்த நபர் முகத்தை கர்சீப்பால் மூடி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பல இடங்களில் விசாரணை செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News