கொக்கராயன்பேட்டையில் குப்பைக்கு தீ - பொதுமக்கள் அவதி
கொக்கராயன்பேட்டை காவிரி கரையோரம் குப்பைகளுக்கு ஒரு சிலர் தீ வைப்பதால் கடும் புகை மூட்டம் உண்டாகி, வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.;
கொக்கராயன்பேட்டை காவிரிக்கரையோரம் குப்பைகள் எரிப்பால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் புகை சூழ்ந்து இருப்பதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த கொக்கராயன் பேட்டை ஊராட்சி. இங்கு, ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் காவிரி ஆற்றங்கரையோரம் பீடி கழிவு குப்பைகள், இதர குப்பைகள் அனைத்தும் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டபடும் குப்பைகளுக்கு, சில நபர்கள் தீ வைத்துச் செல்கின்றனர். குப்பையில் இருந்து கடும் புகை வெளியாகிறது.
இதனால், காவிரிக்கரையோரப்பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை பரவுகிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வயதானவர்கள், மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.
எனவே கொக்கராயன்பேட்டை ஊராட்சி இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைகள் அனைத்தையும் குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.