பெட்ரோல், சானிடைசர், மாஸ்க்: மணமக்களுக்கு கிடைத்த நூதன திருமணப்பரிசு
பள்ளிபாளையத்தில், திருமண நிகழ்வின் போது மணமக்களுக்கு பெட்ரோல், சானிடைசர், மாஸ்க் பரிசாக வழங்கி, நண்பர்கள் அசத்தினர்.;
பள்ளிபாளையத்தில், மணமக்களுக்கு முகக்கவசம், சானிடைசர், பெட்ரோல், ஆகியவற்றை திருமணப் பரிசாக வழங்கிய நண்பர்கள்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் மணமகன் அருண்,மணமகள் சௌந்தர்யா ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக சொற்பமான எண்ணிக்கையில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிபாளையம் காவிரி கரையோரம் உள்ள முருகன் கோவிலில் எளிய முறையில் நடந்த திருமணத்தில், வித்தியாசமாக மணமக்களுக்கு பரிசு கொடுக்க நினைத்த மணமகனின் நண்பர்கள், அவ்வாறே நூதன பரிசு வழங்கி,பலரையும் ஆச்சரியப்படுத்தினர்.
சமீபகாலமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹100 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், அதை மணமக்கள் உணர்ந்து சிக்கனமாக வாழ வேண்டும்; ஆடம்பர செலவுகளைத் தவிர்க்க வேண்டும்; அதேபோல் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்த, முகக்கவசம், சானிடைசர், ஆகியவற்றை மணமக்களுக்கு பரிசுப் பொருளாக வழங்கினர்.
மணமகனின் நண்பர்கள் வழங்கிய இந்த நூதன பரிசு பொருட்கள் பற்றிய தகவல்கள், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.