மத்திய அரசை கண்டித்து குமாரபாளையத்தில் தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மத்திய அரசை கண்டித்து தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-07-15 06:48 GMT

குமாரபாளையத்தில் தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் நடந்தது

குமாரபாளையத்தில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொதுத்துறை வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் கட்டாயம் இல்லை என மத்திய அரசின் வங்கி பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் என கூறி ஒன்றிய அரசை கண்டித்து குமாரபாளையத்தில் திராவிடர் கழகம் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  குமாரபாளையம் நகர திக தலைவர் சரவணன் தலைமை  தாங்கினார். மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் செல்வம், ஞானசேகரன், ஜானகிராமன், சக்திவேல், கணேஷ்குமார், நீலகண்டன், சாமிநாதன், சுப்ரமணி, ஆறுமுகம், ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது குமாரபாளையம் நகர தி.க. தலைவர் சரவணன் பேசியதாவது:-

பொதுத்துறை வங்கி பணிகளில் எழுத்தராக சேர்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில மொழி தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் அது மாற்றம் செய்யப்பட்டது என்பது தெரியுமா? அதற்கான விளம்பரங்களில் பச்சையாக, மாநில மொழியில் தேர்ச்சி கட்டாயம் இல்லை, வெறும் முன்னுரிமை மட்டுமே என்று இடம் பெற்று இருப்பதை அறிவீர்களா? தமிழ்நாட்டு வங்கிகளில் ராஜஸ்தான், ஓடிஸா, போன்ற இதர மாநில இளைஞர்களை குவித்துக்கொண்டு உள்ளனர் என்பது தெரியுமா?

2022,-2023 ஆண்டுகளுக்கான வங்கி கிளார்க் பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு 843 பேர் தமிழ்நாட்டில் நியமனம் செய்யப்பட்டனர். மாநில மொழி தெரியாதவர்களுடன் தமிழ் மட்டுமே தெரிந்த வாடிக்கையாளர்கள் எப்படி உரையாடல் நடத்துவார்கள்?ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் ஹிந்திகாரர்கள் குவிந்து கொண்டுள்ளனர். பயணசீட்டு வாங்கும் இடத்தில் பணியாற்றுவோர், டிக்கெட் பரிசோதகர்களுக்கு தமிழ் தெரியவில்லை. இந்நிலையில் தமிழ் மட்டும் தெரிந்த பயணிகள் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகிறது. எனவே தமிழ் தெரிந்தவர்களுக்கே தமிழகத்தில் பணி வழங்குவதற்கான உத்தரவை மத்திய மாநில அரசுகள் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News